வானம் இளஞ்சிவப்பு ஆடை அணிந்திருந்ததை போலத்தோன்றியது. மேற்கே சூரியன் மறையத் துவங்கி இருந்தான். அதன் பொன்னிறக் கதிர்களையும், மெலிதாய் வீசிய மாலைநேரத் தென்றலையும் ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது எனினும் தற்போது தான் முதன்முதலாய் உணர்பவள் போல சற்றும் இமைக்காமல் தான் பார்வையை சூரியனின் மீதும், உணர்வை தென்றல் மீதும் தனித்தனியே பதிய வைத்திருந்தால் அத்விகா. ஆனாலும் அவளது எண்ணம் என்னவோ ஒன்றின் மீது மட்டுமே இருந்தது.
தன் கையில் ஏழுதுவதற்கு தயாராக பேப்பரும், பேனாவும் வைத்துக்கொண்டு வெற்றிபெற்ற பூரிப்போடு அமர்ந்திருந்தாள். அவளது நினைவலைகள் சற்றே பின்னோக்கி சென்றது.
“அத்விகா?” தன் தோழி ரம்யாவின் குரல்கேட்டுத் தன்னையும் அறியாது மூழ்கிஇருந்த சிந்தையிலிருந்து சற்றே விடுபட்டாள் எனினும் முழுமையாக தெளிவுபெறவில்லை அத்விகா.
அத்விகாவும் ரம்யாவும் கல்லூரியில் பயிலும் மாணவிகள். கல்லூரியிலும் விடுதியிலும் ஒன்றாகவே இருக்கும் தோழிகள். இருவருக்குள்ளும் பரஸ்பரமும், நல்ல நட்பும், புரிந்துகொள்ளும் தன்மையும் இருந்தது. இருவருடைய நட்புவட்டாரத்தைப் பற்றி இருவருமே நன்கு அறிந்திருந்தனர். ஒருவருடைய பிரச்சனைக்கு மற்றொருவர் தீர்வு கூறுவது போன்ற செயல்கள் அவர்களுக்குள் ஒத்துப்போயின .
அத்விகாவின் பெயர்க்காரணம் ஆங்கிலத்தில் சொல்வதானால் ‘யுனிக்நெஸ்’. தமிழில் ‘தனித்தன்மை மிகுந்த’ என்னும் பொருள் வரும்படி தேடிக்கண்டுபிடித்து பெயர் சூட்டி இருந்தார்கள் அத்விகாவின் பெற்றோர். அதனால்தானோ என்னவோ, பெயருக்கு ஏற்றது போல அவளிடமும் அந்தப் பண்பு நிறையப்பெற்றிருந்தது.
எதையும் தெளிவாக யோசித்து தீர்கமாக செய்து முடிப்பாள். ஆனால் இப்போதோ , நிமிடத்திற்கு ஆயிரம் முறை ‘என்ன செய்ய? எப்படிச் செய்ய?‘ என்ற இரண்டு கேள்விக்கணைகள் மட்டுமே அவளை நிஜத்திலும் நினைவிலும் கடந்த இரு வாரங்களாக ஆக்கிரமித்து இருந்தது. அவளால் இன்னமும் ஒரு தெளிவான முடிவுக்கு வர இயலவில்லை. கல்லூரி நேரம் முடிந்து விட்டது. கல்லூரியிலிருந்து ஐந்து நிமிட நடைபயண தூரம் தான் விடுதி. விடுதியை சென்றடைவதற்குள் தான் இத்தனை போராட்டமும் அவளுக்குள் நடைபெற்றிருந்தது என்பதை தோழியின் குரல் கேட்ட பின்னரும் உணர்வுற்றவளாய் தெரியவில்லை.
ரம்யாவிற்கு அத்விகாவின் திடீர் மாற்றம் புரியாத புதிராகத்தான் இருந்தது என்றாலும் ஒரு வாரமாக இருந்ததைவிட தற்போது நாளுக்கு நாள் அவளது நிலைமை சற்று தீவிரமாகி வருவதை ரம்யா கவனிக்க தவறவில்லை. அதன் விளைவாக ரம்யா அத்விகாவை வினவளானால் “அத்விகா என்ன ஆச்சு ? உனக்கு? எதோ பலமான யோசனையில மூழ்கி உள்ளத போல தோணுதே? அது எத பத்தின்னு நா தெரிஞ்சுக்கலாம?“என்று கேட்கும் போது அறையை திறந்து இருவரும் உள்ளே நுழைந்தனர்.
தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தவளுக்கு ரம்யாவின் இரண்டு மூன்று தொடர் கேள்விகள் பெரும் ஆறுதல் அளித்ததோடு முற்றிலுமாக அவளை தன்னிலைக்கு மாற்றி இருந்தது. மயக்கத்தில் இருந்து தெளிந்தவளைப்போல சுற்றும் முற்றும் பார்த்தவள் ரம்யாவின் கேள்விகளை தன்னுள் வாங்கிக்கொள்ள சில வினாடிகள் தேவைப்பட்டது. அதன் பின்னரே அவள் பதிலளிக்க தயாரானாள் அதுவும் கோர்வையான வினாக்களால்.
“என்ன ரம்யா? என்ன கேட்ட? ஏதோ கேட்டமாதிரி இருந்ததே? என்னையா கேட்ட?” என்று அத்விகா கூறியதும் விடையை எதிர்பார்த்த ரம்யாவிற்கு இத்தகைய பதில் வினாக்கள் ஏமாற்றத்தையே அளித்தன எனினும் தான் பேசியதையாவது கவனித்தாள் என்ற அளவிற்கு நிம்மதியடைந்தாள்.
“ஆமா உன்கிட்ட தா கேட்டேன். ஏதோ யோசனையிலேயே ஒரு வாரமாக் சுத்துறியே அதுக்கு என்ன காரணம்னு தெரிஞ்சுகுறதுக்காக” என்று கூறி அறையின் நடுவே கிடந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
“சிறுகதையா? எதுக்கு ?” கேள்விக்குறியாக மாறினாள் ரம்யா.
“அதுவே ஒரு பெரிய கதை” என்று பெருமூச்சு விட்டவள் தொடர்ந்தாள், “உனக்கே தெரியும் என்னோட நண்பர்களை பத்தியும் அவங்களோட திறமைகளை பத்தியும் . அவங்க இப்போ எடுத்த முடிவுப்படி ஒவ்வொருவருக்குளும் இருக்குற திறமையை வெளிக்கொண்டுவர்ற வகையில கவிதை கட்டுரை அல்லது கதை மாதிரி அவுங்க அவுங்களோட சொந்தமா எழுதி வெளியிடனும்னு முடிவு எடுத்திருக்காங்க. மத்தவங்க எழுதிடுவாங்க. அவங்களுக்கும் தமிழுக்கும் அப்படி ஒரு பந்தம் இருக்கு . நான் எழுதுறத நெனச்சா தான் …”, முடிப்பதற்குள் அறையை நாற்பது முறை அளவெடுத்தவள் போல மூச்சிரைக்க நின்றாள்.
இதனை கேட்டுக்கொண்டிருந்த ரம்யா, கதையை தானே சொன்னதைபோன்று உணர்ந்தவளாய் மேஜையின்மீதிருந்த தண்ணீரை அருந்தியவாறு ” நல்ல விஷயம் தான ? இதுக்கு ஏன் இவ்வளவு கவலை? எதை எழுதப்போற? நீ யோசிக்கறத பாத்த கவிதை தொகுப்பாகக்கூட இருக்கும் போல! எழுத ஆரம்பிச்சுட்டியா? எதை பத்தி ? என்ன தலைப்பு? நான் பாக்கலாமா?” மூச்சு விடாமல் குடித்த தண்ணீருக்கான வேலையை செய்து முடித்தாள்.
“ஹா ஹா… கவிதையா? நானா? நல்ல கேட்ட போ! அவங்க சொல்லி ரெண்டு வாரங்கள் முடிஞ்சிருச்சு. ஒரு வாரம் கவிதையா கதையா கட்டுரையா எதை எழுதுறதுன்னு யோசிச்ச்சதுலயே நேரம் போயிருச்சு. கவிதை எழுத ரசனையும் கற்பனை ஆற்றல், தமிழ் மொழியை கையாளும் திறமை இதெல்லாம் வேண்டும். கட்டுரை எழுத ஒரு தலைப்பை பத்தி நுண்ணறிவும், அத மத்தவங்க ஏத்துக்குற மாதிரி படைக்குற ஆற்றலும் வேணும் . இந்த ரெண்டும் கஷ்டமா தெரிஞ்சதால அது வேணான்னு மூனாவதா உள்ள ‘கதை‘யை செலக்ட் பண்ணினேன் .” என்று ஒரு பெரிய விளக்கமே தரலானாள் தன் முடிவைப்பற்றி.
அழுவதா சிரிப்பதா என்றே தெரியாத நிலையில், கேலியும் கிண்டலும் ஒருசேர்த்த குரலில்,” அது எப்படி எல்லாராலும் முடியுது ? என்மேல இவ்வளவு நம்பிக்கையா? நானாவது… கதைய எழுதி முடிப்பதாவது… ஒரு வாரம் முடிவு எடுக்குறதிலேயே போயிருச்சு, இப்போ ரெண்டாவது வாரம் எப்படி போச்சுன்னுகேள்! கதை எழுவது ஒன்னும் அவ்வளவு சிரமமில்லை , ஏதாவது கதை ஓட்டிவிடலாம் என்று நான் நெனச்சது தப்பபோச்சு. முடிவெடுத்ததுக்கப்பரம் தெரியுது, அது ரெண்டையும் விட இதுதான் ரொம்ப கஷ்டம்னு .”
அத்விகா, “கவிதை – ஓரிரு வரிகளில் முடித்துவிடலாம். கட்டுரை – ஓரிரு பத்திகளில் முடித்துவிடலாம். ஆனால் கதை… ஓரிரு பக்கங்களாவது இருக்க வேண்டும். அதுவும் ஆரம்பம் முதல் கடைசி வரை படிப்பதற்கு சுவாரஸ்யமாக, ஒரு கதைக்கரு, கதை மாந்தர்கள், என்று இன்னும் எத்தனை எத்தனையோ. இவை ஏற்படுத்திய கலக்கம்தான் கடந்த ஒரு வாரமாக எனக்கு. இன்றளவும் கதையை துவங்கவில்லை . நான் என்றைக்கு கதை எழுதி முடிக்கப்போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை” என்று தன் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தாள். “யோசிக்க வேண்டிய விஷயம் தான். யாராக இருந்தாலும் இப்படித்தான் இருந்திருப்பார்கள்” என்று அத்விகாவின் நிலைமையிலிருந்து பேசினாள் ரம்யா.
நாவறண்ட காரணத்தினால் தனக்கு தண்ணீர் குடிக்கத்தோன்றவே, ரம்யாவின் அருகே இருந்த மேஜைமீதிருந்த தண்ணீரை குடித்துவிட்டு அவளருகிலேயே அமர்ந்து சற்று அதிகமாக கவலை தோய்ந்த முகத்துடனும் குரலுடனும் ஆரம்பித்தாள்,”நான் அவ்வளவாக எந்த புத்தகத்தையும் படித்ததே கிடையாது. ஒரு சில மாதங்களுக்கு முன்னர் தான் படிக்கும் பழக்கத்தையே ஆரம்பித்துள்ளேன். அதற்குள்ளாக எழுத வேண்டும் என்றால் எப்படி? எல்லாவற்றிற்கும் மேலாக இருவர் ‘டைரக்டர்’ ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடும் கனவோடும் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். அவர்கள் இருக்கும் போது நான் என்ன எழுதிவிடப்போகிறேன்.” என முடித்தாள்.
அத்விகவின் முகத்தையே உற்று நோக்கியிருந்த ரம்யா ” உனக்கு அப்படிப்பட்ட நண்பர்கள் கிடைத்ததற்கு நீ பெருமைப்படு. இதனை ஒரு நல்ல துவக்கமாகக்கொள். உன்னையே நீ அடையாளம் காணுவதற்காக அவர்கள் கொடுத்த வாய்ப்பிற்கு மதிப்பளிக்கும் விதமாக இதனை ஏற்றுக்கொள். உன்னால் நிச்சயம் முடியும். வெளியில் தேடாமல் உன் கதைக்கான தேடலை உனக்குள் இருந்து துவங்கு. முதல் முயர்ச்சியிலேயே வெற்றி கிட்டும்.” என்று தீர்கமாக அத்விகவின் முயற்சிக்கு வித்திட்டு பேசினாள்.
‘உன்னுள் இருந்தே கதை தேடலைத்துவங்கு‘ என்னும் வரிகள் பசுமரத்தாணிபோலமனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே, அவ்வரியை முனுமுனுத்துக்கொண்டே எழுந்த அத்விகா புத்துணர்வு மேலோங்க “கிடைத்துவிட்டது!!! எனது கதை!!!
எனது முதல் கதை என்னைபற்றியதாகவே இருக்கட்டும். நான் கதை எழுத எடுத்த முயற்சிதான் என் முதல் கதைக்கான கரு. எப்படி?” என்று மகிழ்ச்சியோடு கூறினாள். கதை எழுத ஆயத்தமான அத்விகவை புன்முறுவலோடு நோக்கினாள் ரம்யா. இனி தன் தோழியை எழுதுவதிலிருந்து யாராலும் நிறுத்த இயலாது என்ற நம்பிக்கையும், அவளுக்கு கிடைக்கப்போகும் வெற்றியின் பிரதிபலிப்பும் ரம்யாவின் கண்களில் மின்னலென பளிச்சிட்டன.